மாரத்தான் போர் (Battle of
Marathon ) கிமு 490 ஆம் ஆண்டில்
கிரேக்கம் மீதான பாரசீகர்களின்
முற்றுகையின் முதல் கட்டத்தில்
இடம்பெற்றது. இப்போர் ஏத்தன்சு
நகர மக்களுக்கும் பாரசீகர்களுக்கும்
இடையே இடம்பெற்றது.
‘அரசே! அயோனாவிலுள்ள
கிரேக்கர்கள்
மக்களாட்சி வேண்டி கலகம் செய்ய
ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்களது தாய்வழி தேசமான
ஏதென்ஸ், எரித்திரியா போன்ற
கிரேக்க நகரங்கள்
அவர்களுக்கு உதவி செய்கின்றன’
செய்தி வந்தது பெர்சிய பேரரசர்
முதலாம் டேரியசுக்கு.
‘கிரேக்கர்களை இப்படியே விடக்கூடாது.
உடனே எதென்ஸ்
மீது படையெடுத்து அவர்களுக்கு பாடம்
புகட்டுவோம்’- டேரியஸ்
ஆணையிட்டார்.
தரைவழியே சென்று தாக்கவேண்டுமானால்
தாமதமாகிவிடும், தவிரவும்
மலைப்பகுதிகளில்
கிரேக்கர்களை வெல்வதும்
அவ்வளவு எளிதல்ல. எனவே கடல்
வழியாக சென்று திடீர் தக்குதல்
நடத்த முடிவு செய்த பெர்சியா,
அறுநூறு கப்பல்களில்
இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட
வீரர்களோடு கிளம்பியது.
முதலில்
எரித்திரியா தீவை முற்றுகையிட்டது.
ஆறு நாள்கள்
முற்றுகையை தாக்குப்பிடித்த
எரித்திரியா, துரோகிகளின் சதியால்
பெர்சியாவிடம் வீழ்ந்தது.
கோட்டையும், வீடுகளும்,
ஆலயங்களும்
அழித்து தீக்கரையாக்கப்பட்டன,
மக்கள் அடிமைகளாக
சிறைபிடிக்கப்பட்டனர்.
இனி ஏதென்ஸை எளிதில்
வீழ்த்தி விடலாம் என்ற
நம்பிக்கையுடன் எதென்ஸ்
நகரத்திலிருந்து சுமார்
இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த
மாரத்தானில்
தரை இறங்கியது பெர்சியப்படை.
பெர்சியர்களின் வலிமையான
குதிரைப்படையுடன் தரைப்படையும்
சிறந்த தளபதியான டேடிஸ்
தலைமையில்
அணிவகுத்து போருக்குத் தயாராக
நின்றது.
மற்றொரு கிரேக்க நகர அரசான
ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக
வேகமாக ஓடக்கூடிய வீரரான
பீடிப்பிடஸ்(Pheidippides)
என்பவனை ஏதென்ஸ்
அனுப்பியிருந்தது. மலைகள்
சூழப்பட்ட மாரத்தான்
போர்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு செல்லும்
வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள
தயாராக இருந்தது ஏதென்ஸ் படை.
வெறும் 10,000
காலாட்படைவீரர்களைக்
கொண்டிருந்த ஏதென்ஸ்
படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும்
ஒரு தளபதி என்ற வகையில்
பத்து தளபதிகள்
இருந்தனர்.அனைத்துப்படைகளுக்கும்
கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார்.
அவர்களுக்குத் துணையாக 1000
பிளேத்தீனிய வீரர்களும் களத்தில்
இருந்தனர்.
ஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும்
சண்டையிடாமலே இருந்தன.
ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும்
என்ற செய்தி வந்து சேர்ந்தது.
அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர்
மாதம் பன்னிரெண்டாம் நாள்
மில்ட்டியாடிஸ் தான்
கிரேக்கப்படைகளுக்குத்
தலைமைத்தாங்கினார். அற்புதமான
தாக்குதல் வியூகத்தை வகுத்த பின்
‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற
முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த
கிரேக்கப்படை யாரும்
கற்பனை செய்திராத வகையில்
மாபெரும்
பெர்சியப்படையை சிதறடித்தது.
6000க்கும் மேற்பட்ட
வீரர்களை இழந்த
பெர்சியப்படை பின்வாங்கி கடல்
வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க
முடிவு செய்தது. மாரத்தான்
போர்களத்தில் தாங்கள் பெற்ற
மாபெரும்
வெற்றிச்செய்தியை சொல்லவும்,
ஏதென்ஸ்
மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும்
ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர
யாரால் முடியும்.
தனது தாய்நாட்டின்
வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல
மூன்று மணி நேரத்தில்
இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த
பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன
மறுகணம்
வீரமரணமடைந்து வரலாற்றில்
நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின்
நினைவாகவே ‘மாரத்தான் ஒட்டம்’
என்னும் நெடுந்தூர ஓட்டம்
பெயரிடப்பட்டிருக்கிறது. பின்
ஏதென்ஸ் படை நகரை அடைந்தது.
பயந்து போன பெர்சியர்கள்
தரையிறங்காமலே பின்
வாங்கி சென்றனர். இந்த போர்கள
வெற்றியானது அதற்கு பின் வந்த
கிரேக்க நகர அரசுகள்
மக்களாட்சி வழியில் நடைபெற
அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.
வரலாற்றில் நேரடியாகப்
பதிவு செய்யப்பட்டுள்ள முதல்
போரான ‘முதல் மாரத்தான் போர்’
ஐரோப்பிய நாகரீக
வளர்ர்சிக்கு வித்திட்டது என்றால்
மிகையில்லை.
No comments:
Post a Comment