Total Pageviews

Friday 27 April 2012

கல்-7

பண்டைத் தமிழகத்தில் சட்டமும்
நீதியும்
பொருளடக்கம் [ மறை]
1 தொகுப்பு பண்டைத் தமிழகத்தில்
சட்டமும் நீதியும்
1.1 முன்னுரை
1.2 தோற்றமும் வளர்ச்சியும்
1.3 சட்டமும் நீதியும்
1.4 உரிமையியல் நீதிமன்றங்கள்
1.5 குற்றவியல் நீதிமன்றங்கள்
1.6 மக்கள் நீதிமன்றன்கள்
1.7 சிறைசாலைகளும் கைதிகளும்
1.8 முடிவுரை
தொகுப்பு பண்டைத்
தமிழகத்தில் சட்டமும்
நீதியும்
C. M. கணபதி
முன்னுரை
பண்டைத் தமிழகத்தில் நிலவிய சட்டம்
மற்றும்
நீதிமுறை ஆகியவைபற்றி விரிவான
ஆய்வெதுவும் வெளிவந்ததாகத்
தெரியவில்லை. சிற்சில
அம்சங்களைப்பற்றிக் கட்டுரைகளும்
சிறுநூல்களும் வெளிவந்துள்ளன.
அவற்றை, இக்கட்டுரையின்
இறுதியில் ஆய்வுக்குப் பயன்பட்ட
நூல்களின் வரிசையில்
குறிப்பிட்டுள்ளேன்.
இக்கட்டுரையில், தமிழகத்தில்
நிலவிய சட்டம் மற்றும்
நீதிமுறை ஆகியவற்றின் சிறப்பான
பகுதிகளைத் தொகுத்து ஆராய
எண்ணியுள்ளேன். தமிழ்
இலக்கியங்கள், எடுத்துக்காட்டாக,
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,
இரட்டைக்காப்பியங்கள், திருக்குறள்,
பழமொழி நானூறு, பெருங்கதை,
பெரியபுராணம் ஆகியவைகளில்
ஆங்காங்கே காணப்படும், சட்டம்
நீதிபற்றிய, செய்திகளையும், தமிழ்க்
கல்வெட்டுச் சாசனங்கள் மற்றும்
இந்தியக் கல்வெட்டியல்
ஆண்டறிக்கைகள், பல்லவர் மற்றும்
பாண்டியர் செப்பேடுகள் போன்ற
மூலச் சான்றுகளில் காணப்படும்
சட்டம் நீதிபற்றிய செய்திகளையும்,
இப்பொருள் தொடர்பான சில
நூலாசிரியர்களின்
கருத்துகளிலிருந்து கிடைத்த
செய்திகளையும்
தொகுத்து அவற்றைச் சில
முக்கியமான தலைப்புகளில்
பகுத்தாய்வு செய்ய
எண்ணியுள்ளேன்.
இவற்றையெல்லாம் ஒருசேரப்
பார்க்கின்றபோது தமிழகத்தில் சட்டம்
மற்றும் நீதி ஆகியவை பற்றிக்
கூறப்படும் கருத்துக்கள், மனுதர்ம
சாஸ்திரம் போன்ற நீதி நூல்கள்,
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
மற்றும் பௌத்த சமண நீதிநூல்களில்
காணப்படும் கருத்துக்கள்
ஆகியவற்றோடு ஒத்திசைவதைக்
காணமுடிகிறது. இந்த ஒற்றுமை,
ஏறத்தாழ இந்திய துணைக்கண்டம்
முழுவதும் ஒரே விதமான சட்டம்
நீதி ஆகியவையும் அதன் தொடர்பான
அமைப்புகளும் வழக்கத்தில்
இருந்திருக்க வேண்டும் என்பதைக்
காட்டுகிறது.
இக்கட்டுரையில் தமிழகத்தில்
நிலவி வந்த சட்டம் நீதி ஆகியவற்ற
ஆராயும் போது, மேற்கூறிய
வடமொழி நீதி நூல்களில்
காணப்படும் கருத்துக்களையும்
தேவையான இடங்களில் ஒப்பிட்டுக்
காட்டியுள்ளேன்.
தோற்றமும் வளர்ச்சியும்
சட்டத்தின் நிரூபணங்கள் இரண்டு.
ஒன்று மனித நிரூபணம்,
மற்றொன்று தெய்வநிரூபணம். மனித
நிரூபணங்கள் மூன்று.
அவை சாட்சி (சாக்ஷி), ஆவணம்
(லிகிதம்) மற்றும் உடைமை (புக்தி)
ஆகியனவாகும்.
‘சோதனைமுறைகளே’ தெய்வ
நிரூபணங்களாகும். ஆவணம்
சாட்சியை விடவும்,
உடைமை ஆவணத்தைவிடவும்
உயர்வாகவும் கருதப்பட்டது.
மனிதநிரூபணங்கள்
கிடைக்காதபோதுதான் தெய்வ
நிரூபணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கண்டபத்திரம் போடுதல் மற்றும்
முறிவைத்தல் போன்ற
சோதனை முறைகள் பழந்தமிழகத்தில்
தெய்வ நிரூபணங்களாகப் பழக்கத்தில்
இருந்தன. இந்தச்
சோதனை முறைகளின்
அடிப்படையில், வாதி விரும்பும்
கோயிலுக்குப் பிரதிவாதி வருதல்
வேண்டும். அங்கு சத்தியம்
செய்து ஆணையிடவேண்டும்.
பிரதிவாதி குளித்து ஈர உடையுடன்
அரளிப்பூமாலை அணிந்து கோயிலுக்குள்
வருவான். கோயிலில் ஏற்றிவைக்கும்
கற்பூரத்தை, வழக்கை மறுத்துக்
கூறி கையால் அணைக்கவேண்டும்.
இச்செயலைக் கோயிற் பணியாளர்
முறி எழுதிக் காவலர்மூலம்
ஊரார்க்கு அனுப்பிவைப்பது வழக்கம்.
இதனை முறிவைத்தல்
என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
இன்றுங்கூட,
இத்தகு தெய்வநிரூபணச்
சோதனைகள் தமிழகத்துக்
கிராமங்களில் நடைமுறையில்
இருந்து வருகின்றன.
ஆட்சி, ஆவணம் மற்றும் அயலார்
தங்கள் காட்சி ஆகிய மூன்றும்
சட்டத்தின் முக்கியக் கூறுகள் எனச்
சேக்கிழார் கூறுகிறார்.
காத்யாயன்ருடைய கருத்தும்
ஏறக்குறைய
இதுபோன்றெ இருக்கிறது.
ஆனால்,கௌடில்யர் தர்மம் விவகாரம்
சரித்திரம் மற்றும் இராசசாசனம்
ஆகியநான்கும்சட்டத்தின்
நான்கு கால்கள் (சதுஷ்பாதம்)
என்று கூறுகிறார். கௌடில்யர்
காலத்திற்கு முன்னர், ஸ்ருதி,
ஸ்மிருதி, நியாயம் மற்றும் சதசாரம்
ஆகிய நான்கும் சட்டத்தின் முக்கிய
அம்சங்களாகத் திகழ்ந்தன.
பழந்தமிழ் நூல்கள் அனைத்தும்,
ஏதாவதொருவகையில் சட்டம் மற்றும்
நீதிபற்றி எடுத்துரைக்கின்ற
நூல்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக,
திருக்குறன் மற்றும் பெரியபுராணம்
போன்ற நூல்கள் சிறந்த நீதி மற்றும்
சட்ட நூல்களாகத் திகழ்கின்றன.
இதேபோல கி.மு.200க்கும்
கி.பி.600க்கும் இடைப்பட்ட காலத்தில்,
வடமொழியில் ஏராளமான சட்ட
நீதி நூல்கள் (தர்மசாஸ்திரங்கள்)
இயற்றப்பட்டன.
சட்டமும் நீதியும்
பண்டைத் தமிழகத்தில், அரசன்
நாட்டின் நிர்வாகியாக, மக்கள்
கூட்டத்தின் தலைவனாக மற்றும்
நீதிவழங்கும் நீதிபதியாகத் திகழ்ந்தான்.
நாடு விரிவடைந்தபோது,
வெவ்வேறு நிர்வாக அமைப்புகள்
தோன்றின. எனவே, அரசன்
அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க
வேண்டியநிலை ஏற்பட்டது.
இத்தகு அமைப்புகளில்,
நீதித்துறையும் ஒன்றாகும்.
நீதியை முறை தவறாது நேர்மையுடன்
கடைப்பிடிக்கின்ற ஓர் அமைப்பிடம்
இந்த நீதி நிர்வாகத்தை அரசன்
ஒப்படைத்தான். இந்த நீதிநிர்வாக
அமைப்பில் பெரும்பாலும்
அந்தணர்களே அங்கம் வகித்தனர்.
அரச்னே இந்த நீதிஅமைப்பின்
தலைவனாக இருந்தான்.
நீதிவிசாரணை நடக்குமிடம்
‘அறக்களம்’ என அழைக்கப்பட்டது.
அரசனின்
அரண்மனை முகமண்டபமே நீதிமன்றமாகச்
செயல்பட்டது பண்டைநாளில்
மரபு சட்டமாகவும் அரசன்,
அரசனது தலைமைக்குரு மற்றும்
கிராமப்பெரியவர்கள் ஆகியோர்
நீதிபதிகளாகவும்விளங்கி நீதி வழங்கப்பட்டது.
எளிமையான அணுகுமுறை,
பொறுமையான விசாரனை மற்றும்
தவறு செய்தார்க்குத் தகுந்த
தண்டனை வழங்குதல் போன்ற
செயல்கள் ஒரு நேர்மையான
அரசனுக்கு இருக்க வேண்டிய
தகுதிகளாகக் கருதப்பட்டன. அரசன்
தனது குடிகளை அறம் வழுவாமல்
காக்க வேண்டும் என்பதை,
திருவள்ளுவர்
‘முறை செய்து காப்பாற்றும்
மன்னவன்’ என்று குறிப்பிடுகிறார்.
நீதிவழங்கும் நீதிபதியாக
அமர்வதற்கு வயது ஒரு தடையல்ல
என்பதை இளைஞனான கரிகாலன்
தலைமையில்
நரை முடிதரித்து வழக்கொன்றில்
நீதிவழங்கிய செயல்
நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
பண்டைத் தமிழக நியாய மன்றங்கள்
வழங்கிய தீர்ப்பை (Judgement)
’அவையத்தார் ஓலை’
என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.
இதே தீர்ப்பை, ‘நிர்ணயம்’ (Nirnaya)
என்று தர்மசூத்திரம் குறிப்பிடுகிறது.
பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன்
(கி.பி. 768-811) என்பதை,
‘கூடநிர்ணயன்’ என்று வேள்விக் குடிச்
செப்பேடு கூறுகிறது.
பழந்தமிழகத்தின் மிகப்
பழையஅரசமரபாகக் கருதப்படுகின்ற
பாண்டிய மரபு, நீதிவழங்குவதில்
சிறந்து விளங்கியது.
பாண்டியமன்னர்கள்,
ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்
மநுவையும், ஞானத்தில்
பிருகஸ்பதியையும் விஞ்சி நின்ற
தாகப் பாண்டியர் செப்பேடுகள்
கூற்கின்றன. இச்செப்பேடுகள்,
பாண்டிய
அரசர்களை மநுவோடு இணைத்து,
மநூபமன், மநுசமானன் மற்றும்
மனுசரிதன் போன்று பலஅடைமொழிப்
பெயர்களிட்டு அழைக்கின்றன.
பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன்,
மநுதர்சித
மார்க்கத்தின்படி நீதிவழங்கினான்
என்று சீவரமங்கலச்
செப்பேடு கூறுகிறது. பாண்டியன்
இரஜசிம்மன் நீதிக்குக் கொடித்தம்பம்
போன்றவன் எம்றும்,
வாக்கில்பிருகஸ்பதியையும்
விஞ்சிநிற்பவன் என்றும் பாடியர்
செப்பேடுகள் கூறுகின்றன.
பாண்டிய அரசர்கள் மனுதர்ம
சாஸ்திரங்களைக் கடைப்
பிடித்து ஆட்சிசெய்தனர்
என்பதை ‘மநுநெறி தழைப்ப
மணி முடி சூடி’ என்று முதலாம்
மாறவர்மன் சுந்தரபான்இயனின் (கி.பி.
1216-1244) மெய்க்
கீர்த்தி குறிப்பிடுகிறது.
பண்டை நாளையக் கல்வி முறையில்,
சட்டம், தர்மம் மற்றும் நீதி போன்ற
கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.
தர்மசூத்திரம் பயின்றவர்கள் (School
of Dharmasutra) சமுதாயச் சட்டங்கள்
மரபுகள் மற்றும் ஒழுக்கமுறைகள்
ஆகியவற்றையும் பயின்றனர்.
இதேபோன்று, கிருஹ்ய சூத்திரம்
பயின்றவர்கள் (School of Grhyasutra)
தந்தை மகன் கணவன்
மனைவி போன்றௌறவுமுறையின்
உரிமைகள் மற்றும்
அதற்கானசட்டப்பிணைப்புகள்
ஆகியவற்றையும் பயின்றனர்.
மனுவின் சட்ட நூல்கள்
பாடநூல்களாக விளங்கின.
தர்மநூல்களின்
சாரம்சங்களை விரிவாகஎடுத்துரைக்கின்ற
அந்தணர்கள் நிறைந்த அவையில்
(அறநிலை பெற்ற அருள்கொள்
அவையம்), அரசன்
அரியணை(சிங்காதனம்) யில்
அமர்ந்திருக்க, அந்தணர்கள் நிறைவான
நூல்களிலிருந்து வல்லோர் வகுத்த
வாக்கியங்களை விரித்துக்கூற,
அவற்றின் பொருள்கள் பலவற்றையும்
அரசன் கேட்டுப் பயனடைந்தான்’
என்று தரும நூல் பயில்கின்ற
பண்டைய
மரபினைப்பெருங்கதை கூறுகிறது.
பாண்டியன் இராஜசிம்மனின் (கி.பி.
911-938) அரசவையில்,
அரசனுக்கு நீதியை எடுத்துரைக்கும்
அமைச்சனாக ஜடிலன் என்ற
சடையபிரான் பட்ட
சோமயாஜி என்பவன் இடம்
பெற்றிருந்தான்.
பாண்டியன் வீரபாண்டியனுக்கு (கி.பி.
938-958) தர்மத்தை விரித்துரைக்கும்
ஆசானாக (தர்மோபதேஷ்டா குரு)
சிவகாசிச் செப்பேட்டை இயற்றிய
பார்த்திவகேஸரி என்ற தர்ம நூல்
வல்ல கவிஞன் விளங்கினான்.
தர்மசாஸ்திரங்களை முறையாகக்
கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் நிறைந்த
சிறப்பு நீதித்துறை ஒன்று பாண்டிநாட்டில்இருந்தது.
அரசனே இத்துறைக்குத்தலைவனாகத்
திகழ்ந்த்தான்.
தமிழ்நாட்டில், இராசக்கர் (Rajuka)
என்ற நில அளவை அதிகாரிகள்,
பண்டைநாளில் இருந்தனர்.
எடுத்துக்காட்டாக,
‘கோட்டாற்று இராசக்கரை’ க்
குறிப்பிடலாம். இவர்கள் தங்கள்
நிலஅளவைப்
பணியோடு,கிராமங்களின்
நீதிபரிபாலனப் பணிகளையும்
செய்து வந்தனர். இவர்கள்,
இந்தியாவில் மௌரியர் ஆட்சிக்
காலத்திலிருந்தே இருந்து வருவதாக
அசோகனது சாசனங்கள்
குறிப்பிடுகின்றன. இந்த இராசக்கர்கள்
பெயரால், தமிழ்நாட்டில்
இராசக்கமங்கலம் மற்றும்
இராசக்கப்பட்டி என்ற பெயர்களில் பல
ஊர்கள் இருக்கின்றன.
உரிமையியல் நீதிமன்றங்கள்
தமிழகத்தில் பண்டை நாளில்,
அறங்கூறு அவையம்,
அறங்கெழு நல்லவை, அறநிலைபெற்ற
அருள்கொள் அவையம் மற்றும்
தர்மாசனம் போன்ற பல உரிமையியல்
நீதிமன்றங்கள் இருந்தன. இவைகள்,
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்
குறிப்பிடுகின்ற தர்மாஸ்த்யம்
(Dharmastya)என்ற உரிமையியல்
நீதிமன்றத்திற்கு இணையனவைகளாகும்.
பாண்டியர் தலைநகரான மதுரையில்
ஒரு அறங்கூறு அவையம் இருந்ததாக
மதுரைக் காஞ்சியும், சோழநாட்டின்
துறைமுகமான
காவிரிப்பூம்பட்டினத்தில்
ஒரு அறங்கூறு அவையம்
இருந்ததாகச் சிலப்பதிகாரமும்,
சோழர்களின் பழைய தலைநகரான
உறந்தையென்னும் உறையூரில்
ஒரு அறங்கெழுநல்லவை இருந்ததாக
அகநானூறு, புறநானூறு மற்றும்
நற்றிணை போன்ற இலக்கியங்களும்
குறிப்பிடுகின்றன.
தருமாசனம் என்ற உரிமையியல்
நீதிமன்றம் இருந்ததாகப் பிற்காலப்
பல்லவர் ம்ற்றும் முற்காலச் சோழர்
சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
அறங்கூறு அவயத்தையே தர்மாசனம்
என்று சாசனங்கள் குறிப்பதாக
இலக்கிய உரையாசிரியர்கள்
கருதுகின்றனர். இந்த உரிமையியல்
நீதிமன்றங்களின்
நீதிபதிகளை ‘தர்மாதிகாரி’
என்று பஞ்சதந்திரமும்,
நடுவுநிலை நாயகன்
அல்லது ’தர்மாத்யக்ஷன்’
என்று தளவாய்புரச் செப்பேடும்,
‘தர்மாசனபட்டர்’
என்று சோழர்சாசனங்களும்
குறிப்பிடுகின்றன. இந்த
நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள்
‘மகாதார்மாத்யக்ஷர்’
என்று அழைக்கப்பட்டனர்.
வழக்குத் தொடர்ந்தோருள்
ஒருவர்பால் செற்றமும், ஒருவர்பால்
உவகையும் செய்யாமல்,
துலாக்கோல் போன்ற
நடுநிலையுடையராய்
தர்மத்தையே மேற்கொண்டு அதனை வழக்கிட்டோர்க்கு விளக்கிக்
கூறும் சிறந்த கொள்கைச் சான்றோர்
நிறைந்த அவையாக
மதுரை நகரத்து அறங்கூறு அவையம்
விளங்கியது என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.
புகார்நகரத்து அறங்கூறு அவையத்தில்,
தர்மநூல்களின் (தர்மசாஸ்திரம்)
படி நீதி வழ்ங்குகின்ற
நடுநிலை தவறாத தர்மசாசனத்தார்
நிறைந்திருந்தனர் என்றும்
தவறு நடந்தால், அந்தத்
தவறினை வாயால் கூறாது கண்ணீர்
வடித்துக் காட்டிவிடும்.
நீதிதேவி அங்கு வீற்றிருந்தாள் என்றும்
சிலப்பதிகாரம் கூறுகிறது.
உறந்தையிலுள்ள
அறங்கெழுநல்லவையை உயர்ந்த
அணிகலன்களுக்கு ஒப்பிட்டு அகநானூறுமிந்த
அவையில் முறைமை செய்தல் மிக
எளிதென்று புறநானூறும்
இங்கு தர்மம்கெடுதல் மிக
அரிது என்று நற்றிணையும்
கூறுகின்றன.
தர்மாசனம் என்பது, நீதிவழங்கும்
இருக்கை, நீதி வழங்கும் இடம்
என்று பொதுவாகப் பொருள்
கொள்ளலாம். தர்மாசனம்
என்பது கிராமநிர்வாக அமைப்பைக்
கட்டுப்பாடில் வைத்திருக்கின்ற,
கோயில் தொடர்புடைய
வழக்குகளை விசாரணை செய்கின்ற
ஒரு நீதிமன்றம் என்று பிற்காலப்
பல்லவர் சாசனங்கள் கூறுகின்றன.
‘தர்மாசனம் என்பது நிரந்தரமாக
நியமனம் செய்யப்பட்ட
ஒரு நீதி மன்றம்’
என்று எஸ்.கே.அய்யங்கார்
கூறுகிறார்.
பல்லவன் நிருபதுங்க வர்மனின்
திருவொற்றியூர் கல்வெட்டே,
தர்மசாசனம் பற்றிக் குறிப்பிடுகின்ற
மிகப் பழமையான சாசனமாகும்.
பஞ்சதந்திரம் கூறுகின்ற
தர்மாதிகாரிகள், பல்லவர்
காலத்து தர்மாசனத்தில் நீதிபதிகளாகப்
பணிபுரிந்தவர்கள்
என்று மீனாட்சி கூறுகிறார், நீதிக்குத்
தலைவர்கள் தர்மத்திறு அதிகாரிகள்
தர்மாதிகாரிகளாவர். தர்மாசனம்
என்பது அரசனுடைய
நீதிமன்றமே என்றும், இங்குவரும்
வழக்குகளை அரசன்
விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவான்
என்றும், இந்த நீதிபரிபாலனப் பணியில்
அரசனுக்கு உறுதுணையாக அறநூல்
(சட்டநூல்) வல்ல அந்தணர்கள் பலர்
அமர்ந்திருப்பர் என்றும்
நீலகண்டசாஸ்திரி கூறுகிறார்.
சோழர் காலத்தில்,
பல்வேறு கிராமசபையினர், தங்கள்
செலுத்தத் தவறிய பணத்துக்கான
தண்டத்தொகையை தர்மாசனத்தில்
கொண்டு வந்து செலுத்தினர்
என்று சோழர் சாசனங்கள்
கூறுகின்றன தர்மாசனத்தில் செலுத்த
வேண்டிய தண்டத்தொகைக்கு ஈடாக,
ஊர்ச்சபையார்
தங்களையே பிணையாக வைத்தனர்
என்று பரகேசரிவர்மனின்
காஞ்சி கைலாசநாதர் கோயில்
கல்வெட்டு கூறுகிறது.
சோழர்காலத்து தர்மாசனத்தில்.
தர்மாசனபட்டர் என்றநீதிபதிகள்
இடம்பெற்றிருந்தனர். தர்மாசனபட்டர்
என்பதை, அறம் உரைக்கும் அந்தணர்
எனப்பொருள் கொள்ளலாம்.
முற்காலப் பாண்டியராட்சியில்,
நீதிபதிகள் ‘நடுவுநிலை நாயகன்’
என்று தமிழிலும் ‘தர்மாத்யக்ஷன்’
என்று வடமொழியிலும்
அழைக்கப்பட்டனர். தர்மம் சார்ந்த
செயல்களுக்கு நடுவராக
விளங்குபவர்
நடுவுநிலை நாயகனாவார்.
தர்மத்தைக் கண்காணிப்பவன்
‘தர்மாத்யக்ஷன்’ என்று பொருள்
கொள்ளலாம்.
பாண்டியன் பராந்தக வீரநாராயணனின்
(கி.பி. 866-911) ஆட்சிக்காலத்தில்,
வெண்புநாட்டுப்
பெருந்தூவெள்ளி என்னும் ஊரைச்
சேர்ந்த சேந்தங்கிழவன் என்ற
சுப்பிரமணியன் தளவாய்ப்புரச்
செப்பேட்டுத் தானத்தை வழங்குவதில்
நடுவுநிலைநாயகனாக
(தர்மாத்யக்ஷன்) விளங்கினான்.
இவன்வேத சாஸ்திரங்களைக்
கரைகண்டவன்;கல்வி, மேதை, புகழ்
ஆகியவ்ற்றில்
காத்யாயனருக்கு இணையானவன்.
கிழவன் என்ற அடைமொழியைக்
கொண்டவன். பெருந்தகையென்றும்,
பெருந்தூவெள்ளி கிழவன் என்றும்,
பெருந்தூவெள்ளியின்
திருந்துபதிக்குடித் தலைவன் என்றும்
செப்பேட்டால் சிறப்பித்துப்
பேசப்பட்டவன்.
கி.பி.எட்டு மற்றும் கி.பி.பத்தாம்
நூற்றாண்டுகளைச் சேர்ந்த
வேள்விக்குடி மர்றும் தளவாய்ப்புரச்
செப்பேடுகள், நில உரிமை மற்றும்
வழிவழிச் சொத்துரிமை சம்பந்தப்பட்ட
இருவேறு வகையான
அரசு ஆவணங்களாகும். இந்த
இரண்டு செப்பேடுகளின் மூலம்,
அரசர்களின் முன்னோர்களில் ஒருவர்
நிலதானங்களை வழங்கியுள்ளார்.
ஆனால், அரசர்களிடம் நேரில்
முறையீடு செய்து நில தானங்களைப்
பெற்றவர்களின் வழிவந்தவர்கள், அந்த
நிலங்களைப் பின்னாளில்
இழந்து விட்டனர்.
பின்னாளில், ஆட்சிக்கு வந்த பாண்டிய
அரசர்கள் இந்த
வழக்குகளை விசாரணை செய்து,
ஆதியில் தானம் பெற்றவர்களின்
வழிவந்தவர்களுக்கு நிலங்களை வழங்கியுள்ளனர்.
ஆகவே, இந்த வழக்குகளின் தீர்ப்புகள்
அரசர்கள் அவர்களது தகுதிக்கேற்ப
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக
இருந்து வழங்கிய உரிமையியல்
தீர்ப்புகள் என்று சொன்னால்
அது மிகையாகாது. இது வழிவழிச்
சொத்துரிமையின் அடிப்படையில்
வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதை,
’பான்முறையிற் தரப்பட்டது’
என்று வேள்விக்குடிச்
செப்பேடு குறிப்பிடுகிறது.
கி.பி.800க்கும் கி.பி.1200க்கும்
இடைப்பட்ட காலகட்டத்தில்,
இந்தியாவில் தயாபாகம் மற்றும்
மிதாட்க்ஷரம் என்ற வழிவழிச்
சொத்துரிமை சம்பந்தப்பட்ட
இரு குடும்பச் சட்டங்கள்
நடைமுறையில் இருந்தன.
முறைப்படி தந்தை இறந்த
பின்னர்தான், மகன்கள் தந்தையின்
சொத்துக்களை அடையமுடியும்;
ஆனால், மிதாட்க்ஷர முறைப்படி,
தந்தை உயிரோடு இருக்கும்பொழுதே,
மகன்கள் தந்தையின்
சொத்துக்களை அடையலாம்.
இவற்றுள், மிதாட்க்ஷா முறை,
தென்னிந்தியாவில் நடைமுறையில்
இருந்தது என்ற செய்தியை,
‘மனு விஞ்ஞானேஸ்வரம்
அது பயின்று’ என்றதன் மூலம்
அறியலாம்.
குற்றவியல் நீதிமன்றங்கள்
பண்டைத் தமிழகத்தில்
பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்கள்
இருந்துள்ளன. அவற்றுள் அதிகரணம்
மற்றும் கண்டக சோதனை போன்ற
குற்றவியல் நீதிமன்றங்கள் குறிப்பிடத்
தக்கவையெனலாம்.
கண்டக சோதனைபற்றிக் கௌடில்யர்
தனது அர்த்தசாஸ்திரத்தில் விரிவாகக்
கூறியுள்ளார். குற்றங்கள் பற்றியும்
அதற்கான தண்டனைகள் பற்றியும்
விரிந்துரைக்கின்ற சட்டநூல்களைக்
கௌடில்யர் ‘தண்டநீதி’
என்று குறிப்பிடுகின்றார்.
பழந்தமிழகத்தில்
பல்லவராட்சியின்போது, அதிகரணம்
என்ற குற்றவியல் நீதிமன்றம்
நடைமுறையில் இருந்தது.
இது இயங்கிவந்த இடம் ‘அதிகரண
மண்டபம்’ என அழைக்கப்பட்டது.
இங்கு பணிபுரிந்த நீதிபதிகள் தர்ம
அதிகரணிகர், அதிகரணிகர் மற்றும்
அதிகரண போஜகர் என
அழைக்கப்பட்டனர். தலைமை நீதிபதி,
மகாதர்ம அதிகரணிகர் என
அழைக்கப்பட்டார்.
இந்நீதிமன்றத்தில், கரண தண்டம்
மற்றும் அதிகரண தண்டம் போன்ற
தண்டனைகள் வழங்கப்பட்டதாகக்
காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது.
பண்டை நாளில், பல்லவர் காஞ்சியில்
அதிகரண நீதிமன்றம்
அமைந்திருந்தது. கபாலம்
காணாமற்போனதன் பொருட்டு,
காபாலிகளுக்கும் சாக்ய
பிட்சுக்களுக்கும் இடையே நடந்த
சண்டையை, காஞ்சி அதிகரண
நீதிமன்றம்
விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியது.
தவிர, விஜயாதிபதிகளின்
தலைநகரங்களிலும் அதிகரண
நீதிமன்றங்கள் அமைந்திருந்தன. கரண
தண்டம் மற்றும் அதிகரண தண்டம்
போன்ற
தண்டத்தொகைகளை சம்பந்தப்பட்ட
தானத்தாரிடமோ அல்லது நன்கொடையாளரிடமோ செலுத்த
வேண்டுமேயொழிய, அரசனிடம்
செலுத்தவேண்டிய
அவசியமில்லையென
அரசனே ஆணை பிறப்பித்த
சாசாக்குடிச்
செப்பேடு குறிப்பிடுகிறது.
இதே செப்பேடு, நிலைக்களத்தார்,
அதிகாரர் மற்றும் வாயில் கேட்போர்
ஆகிய
மூன்றுவகை அதிகாரிகளுக்கு முன்னிலையில்
‘பரதத்தி’ செய்ய வேண்டும்
என்பதையும் குறிப்பிடுகிறது.
பண்டைத் தமிழகத்தில், முற்காலப்
பாண்டியராட்சியின்போது,
கண்டகசோதனை நீதிமுறை முழுமையாகச்
செயல்பட்டதெனலாம். கண்டக
சோதனை நீதிமுறை பற்றிய
செய்திகள், பராந்தக
நெடுஞ்சடையனின் (கி.பி.768-811)
ஸ்ரீவரமங்கலச் செப்பேட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது. பராந்தக
செடுஞ்சடையன் மநுவின் வழியில்
சென்று குருசரிதம் போற்றி, குற்றம்
நடப்பதற்கான
ஒவ்வொரு காரணத்தையும்
தானே கண்டறிந்து அவற்றைக்
களைந்தான் என்பதை,
‘மநுதர்சித மார்க்கத்தினால் குருசரிதம்
கொண்டாடி
கண்டக சோதனைதான் செய்து’
என்று ஸ்ரீவரமங்கலச்
செப்பேடு கூறுகிறது. எனவே கண்டக
சோதனை நீதிமுறை எட்டாம்
நூற்றாண்டிலேயே தமிழகத்தில்
நடைமுறையில் இருந்து வந்துள்ள
செய்தி தெரியவருகிறது. மேலும்,
இட்ந்த நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதியாக
அரசனே வீற்றிருந்து,
கொடியகுற்றங்களைக்
கண்டறிந்து தீர்ப்பும்
வழங்கியுள்ளான். பராந்தக
நெடுஞ்சடையனின் பல்வேறு விருதுப்
பெயர்களில் ‘கலிப்பகை கண்டக
நிஷ்டுரன்’ என்பதும் ஒன்றாகும்.
இதேபோன்று,
சோழமன்னர்களாட்சியிலும், கண்டக
சோதனை நீதிமுறை நடைமுறையில்
இருந்தது. சோழராட்சியில்,
கிராமத்திற்கு எதிரான குற்றவாளிகள்,
‘கிராம கண்டகர்கள்’
என்றழைக்கப்பட்டனர்.
மக்கள் நீதிமன்றன்கள்
மன்றம், மகாசபை, நியாயத்தார்சபை,
எண்பிரேயம், ஐம்பெருங்குழு,
நாற்பெருங்குழு, புகவு,
சித்ரமேழி மர்றும் ஸம்வத்சரவாரியம்
போன்ற மக்கள் நீதிமன்றன்கள்
பழந்தமிழகத்தில் இயங்கி வந்தன.
இவற்றுள், மன்றம், மகாசபை,
நியாயத்தார்சபை, சித்ரமேழி மர்றும்
ஸம்வத்சர வாரியம்
போன்றவை கிராமநீதிமன்றங்கள்;
ஏனைய, எண்பேராயம்,
ஐம்பெருங்குழு நாற்பெருங்குழுமற்றும்புகவு போன்றவைமேல்முறையீட்டு நீதிமன்றங்கள்
எனலாம்.
பழந்தமிழகத்தில் ஊரின்
நடுவே அமைந்த எளிய மரத்தின் கீழ்
ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி, ஊர்
சம்பந்தப்பட்ட
வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவர்.
இதனை, மன்றம் மர்றும் மன்று என
அழைத்தனர். இந்த மன்றம், பொதியில்,
பொதியில் மற்றும் பொதுவில்
எனவும் அழைக்கப்பட்டது.
எந்த மரத்தின் இடியில் இந்தமன்றம்
கூடிகிறதொ, அந்த மரத்தின்
பெயராலேயே இலத்தி மன்றம்
(இலத்தி மரம்) விளாமன்றம்
(விளாமரம்), பலாமன்றம் (பலாமரம்)
மற்றும் வேப்பமன்றம் (வெப்பமரம்)
எனவும் அழைக்கப்பட்டது.
தமிழ் இலக்கியங்கள் மற்றும்
சாசனங்களில் மன்று மற்றும்
மன்றாடுதல் போன்ற சொற்கள்
நீதிபரிபாலனச் சொற்களாகப்
பயின்று வந்துள்ளன. நீதிமன்றத்தில்
நீதிபதி முன்னிலையில்
தனது குறைகளை எடுத்துரைக்கும்
ஒருவனை ‘சான்றோர்முன் மன்றிற்
கொடும்பாடு உரைப்போர்’
என்று திரிகடுகம்
கூறுகிறது உரிமையின்
பொருட்டு எதிர்த்துப் போராடும்
பழையவழக்காளியை, ‘பழைய
மன்றாடி போலும்’ என்று பெரிய
புராணம் கூறுகிறது. நிதிவழங்கும்
நீதிபதியை ‘மன்றாடுவார் நாயகர்’
என்று நந்திவர்ம பல்லவனின்
சாத்தமங்கலம் கல்வெட்டும்
(கி.பி.764) ‘மன்றாடுவார்’
என்று பராந்தக நெடுஞ்சடையனின்
மானூர்க் கல்வெட்டும் கூறுகின்றன.
பல்லவர் மற்றும்
முற்காலப்பாண்டியர் காலங்களில்,
அந்தணர்கள் வாழ்ந்த பிரம்ம
தேயங்களில் ‘மகாசபை’ என்ற
நீதிஅமைப்பு நடைமுறையில்
இருந்தது. மகாசபை, சதுர்
வேதிமங்கலச்சபை மர்றும்
தேவதானத்துச்சபை எனவும்
அழைக்கப்பட்டது.
கிராமங்களில் நிகழ்கின்ற சிறிய
குற்றவியல்
வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதே இதன்
முக்கியப்பணியெனலாம்.
மகாசபை கூறுகின்றபோது, உயர்
அதிகாரியான அந்தணர் ஒருவரும்
சபையில் இடம் பெறுவார்.
இவர் ‘மன்றாடுவார்’ என
அழைக்கப்பட்டார். இந்த மகாசபை,
தர்மசாஸ்திரத்தின் அடிப்படையில்
இயங்கி வந்தது.
இச்சபை நிர்வாகத்திறன் உடையதாக
விளங்கியது. இங்கு வழக்குக்
கேள்விமுறை செய்பவர்கள்,
‘சிராவணைபுகுவார்’ என அழைக்கப்
பட்டனர்.
அந்தணரல்லாத ஏனைய இனத்தவர்
வாழ்கின்ற வெள்ளான் வகை ஊர்களில்
நியாயத்தார்சபை’ என்ற
நீதி அமைப்பு நடைமுறையில்
இருந்தது. இது, ஊர்ச்சபை மற்றும்
தனியூர்ச்சபை எனவும்
அழைக்கப்பட்டது.
கௌடில்யருக்கு முற்பட்ட
காலகட்ட்த்தில், நீதியின் கூறுகளில்
ஒன்றாகவிளங்கிய நியாயம் (Nyaya)
என்பதன் அடிப்படையில், நியாயத்தார்
சபை தோன்றியிருக்கவேண்டும்.
எட்டுப்பேர் அடங்கிய ‘எண் பேராயம்’
என்ற நீதிமன்றம் பழந்தமிழகத்தில்
இயங்கிவந்ததாக இலக்கியங்கள்
கூறுகின்றன. இந்த எண்பேராயத்தில்,
கரணத்தியலவர், கர்மகார்ர்,
கனகச்சுர்றம், கடகாப்பாளர்,
நகரமாந்தர், படைத்தலவர்,
யானை வீர்ர் மற்றும் இவுளிமறவர்
ஆகிய எண்மர் இடம் பெற்றிருந்ததாக
உரையாசிரியர் கூறுவர்.
அரசர்க்குரிய
எட்டுவகை ஆயத்தாரே இந்த எண்மர்
என்று திவாகரம் கூறுகிறது. இந்த
எண்பேராயம் அர்த்தசாஸ்திரம்
கூறுகின்ற எண்மர் நீதிமன்றம்மற்றும்
புத்தர் காலத்திய பீகாரில் இருந்த
குடியரசு மரபுசார்ந்த அழ்ஹ்ட
குலகர் (Ashtakulaka) ஆகிய
மேன்முறையீட்டு நீதிமன்றங்கட்கு இணையானதாகும்.
கிருஷ்ணதேவராயரின் அரசவையில்
‘அஷ்ட்திக்ககஜங்கள்’
என்றே எண்மர்குழு இருந்த்து குறிப்பிட்த்தக்கது.
இரட்டைக்காப்பியமும்
பெருங்கதையும் குறிப்பிடுகின்ற
ஐம்பெருங்குழுவும் மற்றொரு மக்கள்
நீதிமன்றமாகும்.
அரசர்க்கு இன்றியமையாதவர்களான
அமைச்சர், புரோகிதர், சேனாபதியர்,
தூதுவர் மற்றும் சாரணர் ஆகிய
ஐவகை அரசியல்தலைவர்களைக்
கொண்டதே ஐம்பெருங்குழு வாகும்.
இந்த ஐவரால் வழங்கப்படும்
தீர்ப்பு ‘பஞ்சக்கம்’ எனப்பட்டது.
இதனை, ஆய்மன்னன்
கருநந்தடக்கனின் பார்த்திவசேகரபுரச்
செப்பேடு ‘சட்டர்’ ஐவரைக்
கொண்டு பஞ்சக்கம் ’செய்தான்’
என்று குறிப்பிடுகிறது.
‘சிரேணி’ என்ற ஐவர் நீதிமன்றமும்
‘பஞ்சகுலம்’ என்ற நடுவர்மன்றமும்,
பண்டைய ஐம்பெருங்குழுவினைப்
போன்றதேயாகும். இன்றைய,
‘பஞ்சாயம்’ அல்லது ‘பஞ்சாயத்து’
என்ற நீதி அமைப்பு, இந்த
ஐம்பெருங்குழுவின் எச்சம்
என்றே கூறலாம் பஞ்சாயத்தார்
வழக்கை விசாரணை செய்யும்
முறையைக் ‘கரையேறுதல்’ எனவும்,
‘பஞ்சாயம்’ எனவும் கல்வெட்டுகள்
குறிப்பிடும். பஞ்சாயத்தார், வழக்கின்
தொடக்கால வரலாறு முதல்
விளக்கமாகவும் விரிவாகவும் எழுதி,
அதை மறைபொருளாக்கி முத்திரையிட்டு ஊர்க்காவலர்
மூலம் கொடுத்தனுப்புவது வழக்கம்.
இம்முறையை ஏறுபோடுதல்
என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்ற
‘நாற்பெருங்குழு’வும் மக்கள்
நீதிமன்றமே. குறுநிலமன்ன்ன்
பழையனின் தலிமையிடமான
மோகூரில்
நாற்பெருங்குழு ஒன்று நடைமுறையில்
இருந்த்து. ‘ஐம்பெருங்குழுவில் உள்ள
அமைச்சர் நீங்கலாக, ஏனைய
புரோகிதர், சேனாபதியர், தூதுவர்
மற்றும் சாரணர் ஆகிய
நால்வருமே நாற்பெருங் குழுவினர்
என்று உரையாசிரியர் கூறுவர்.
நாற்பெருங்குழுவினர், நான்மொழிக்
கோசர் போன்று விளங்கியதாக
மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இந்த
நாற்பெருங்குழுவும், தர்மசாஸ்திரம்
குறிப்பிடுகின்ற பிரம்மநீதிமன்றமும்
ஒன்றேயாகும்.
நான்கு வேதங்களையும்
உச்சரிக்கின்ற பிரம்மனின்
நான்கு முகங்கள் போல,
பிரம்மநீதிமன்றத்திலும்
நான்கு உறுப்பினர்களே
இடம் பெர்றிருந்தனர்.
பண்டைநாளில் வெவ்வேறு தொழில்
செய்கின்ற பல இனத்தவர்கள்
என்றுகூடி, ‘புகவு’ (Puga) என்ற
மக்கள்
நீதிமன்றத்தி உருவாக்கி இருந்தனர்.
ஆய்மன்னன் கருநந்தடக்கனின்
பார்த்திவசேகரபுரச் செப்பேடும்
புகவு பற்றிக்குறிப்பிடுகிறது.
பின்னாளில் சாதிகள் அனைத்தும்
தனித்தனியே பிரிந்து,
சாதிப்பஞ்சாயத்து என்ற நீதி அமைப்பு,
உருவானது. இராமங்களில்
ஒவ்வொரு சாதிக்கும்
ஒரு நடுவர்குழு அமைந்து,
அதுவே அந்தச்சாதியின்
உச்சநீதிமன்றமாகவும் செயல்பட்டது.
சோழ்ராட்சியில், வெள்ளாளர்கள்
‘சித்ரமேழி’ என்ற தொழில்முறைக்
குழுக்களை நிறுவியிருந்தனர்.
இவர்கள் அரசர்களைப் போன்று,
தனக்கெனச் சொந்த மெய்க்கீர்த்தியைக்
கொண்டு விளங்கினர். தவிர,
தங்களது இனம் சம்பந்தப்பட்ட
பணிகளநிறைவேற்றிக்
கொள்வதற்கென அரசியல்
அமைப்பொன்றினையும்
நிறுவியிருந்தனர். இதுவே, இந்த
இனத்தவரின் நீதிமன்றங்களாகவும்
செயல்பட்டன.
இரண்டாம் இராஜேந்திர சோழனின்
ஆட்சியில், இராஜேந்திர சோழச்
சித்ரமேழி என்ற நீதிமன்றம் இருந்தது.
இந்த மன்றத்தில் ‘பெருக்காளர்’ என்ற
நீதிபதிகள் இருந்துநீதி வழங்கினர்.
தாமரைப்பாக்கத்தை(வ.ஆ.மா.)ச்
சேர்ந்த அண்ணன் தம்பியர் இருவர்
ஒருவரையொருவர்
அடித்துக்கொண்டதில், தம்பி அடித்த
அடியில் அண்ணன் இறந்துவிட்டான்.
இந்த வழக்கை, இவர்களது தந்தை.
இராஜேந்திர சோழச்
சித்ரமேழி நீதி மன்றத்துக்கு எடுத்துச்
சென்றார். வழக்கை விசாரித்த
பெருக்காளர் தம்பி செய்த கொலைக்
குற்றத்துக்கு மரணதண்டனையே சரியான
தண்டனை என்றபோதிலும்,
மனிதாபிமான அடிப்படையில்,
சொத்து எதுவுமில்லாத
வயதுமுதிர்ந்த தந்தையையும்
தாயையும், தம்பியே பராமரிக்க
வேண்டிய நிலை இருந்ததால்,
ஊர்க்கோயிலுக்கு அரைவிளக்கு எரிக்க
பொருள் வழங்கினால் போதும் எனத்
தீர்ப்பு வழங்கினர். இந்தத்
தீர்ப்பு ‘சுத்தபட்டிகை’ எனச்
சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயநகர ஆட்சிக்காலத்தில்,
ஸம்வத்சரவாரியம் என்ற ஒரு குழு,
ஊர்ச்சபைக்குழுக்களில் ஒன்றாக
விளங்கியது. ஸம்வத்சரம்
என்பது வருடத்தைக் குறிக்கும்.
ஸம்வத்சர வாரியம்
என்பது வருடந்தோறும்
தேர்ந்தெடுக்கப்படும் கிராம நிர்வாக
சபையைக் குறிக்கும்.
சட்டம் மற்றும் நீதிபரிபாலனம்,
கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது பாதுகாத்தல்
மற்றும்
கோயிற்பணி ஆகியவை ஸம்வத்சர
வாரியத்தின் முக்கியப்பணிகளாகும்.
ஸம்வத்சரவாரிய உறுப்பினர்கள்
‘பெருமக்கள்’ என அழைக்கப்பட்டனர்.
‘ஸ்ம்வத்சரவாரியப் பெருமக்கள்’
என்று சாசனங்கள் இவர்களைக்
குறிப்பிடுகின்றன. இந்த பெருமக்கள்
ஒவ்வொரு ஆண்டும் புதிதுபுதிதாகத்
தேர்வு செய்யப்பட்டனர்.
சிறைசாலைகளும் கைதிகளும்
பண்டைநாளில், சிறைச் சாலைகள்,
சிறை, சிறைக்கோட்டம்,
சிறையோர்கொட்டம் மற்றும் வேளம்
பெயர்களால் அழைக்கப்பட்டன.
சிறைச்சாலை அதிகாரிகள்,
சிறைக்கோட்டக்காவலர் மற்றும்
வேளத்தி போன்ற பெயர்களால்
அழைக்கப்பட்டனர். வேளத்தி என்பது,
சிறையின் பெண்காவலர்களைக்
குறிக்கும்.
சேரன் கணைக்கால் இரும்பொறை,
சோழன் செங்கணானால்
தோற்கடிக்கப்பட்டு, குடவாயிற்
கோட்டத்து சிறையில்
சிறைவைக்கப்பட்டான். சிறையில்
தாகத்தின் போது தண்ணீர்
வழங்காததால்,
உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தான்.
பசியின் கொடுமையால் சிறையில்
வாடிய கைதிகளுக்கு, அட்சய
பாத்திரத்தின்
அருள்கொண்டு மணிமேகலை ஆகாரம்
வழங்கினாள்.
சோழ அரசர்கள் தாங்கள்
வெற்றி கொண்ட எதிரிகளின் செல்வம்
மர்றும் யானைகளைக்
கவர்ந்து வருவதோடல்லாமல்,
எதிரிகளது அரச மகளிரையும்
தனது நாட்டுக்கு அடிமைகளாக
அழைத்து வந்து, தங்களது அரச
மாதேவிகளுக்குப் பணிப்பெண்டிராக
அமர்த்துவதை வழக்கமாகக்
கொண்டிருந்தனர்.
சோழன்கரிகாலன் காலத்தில்
இங்ஙனம் அழைத்துவரப்பட்ட
அடிமைப் பெண்கள் அம்பலங்களிலும்
கோயில்களிலும் பணிப்பெண்களாகப்
பணிபுரிந்தனர் எனப்
பட்டினப்பாலை கூறுகிறது.
இதே பழக்கத்தை முதலாம்
குலோத்துங்கச் சோழனும்
கடைப்பிடித்து வந்துள்ளான்
என்பதை கலிங்கத்துப் பரணியும்
அரசனது மெய்க் கீர்த்தியும்
மெய்ப்பிக்கின்றன. இங்ஙனம்
அழைத்துவரப்பட்ட
அடிமை பெண்களின் உறைவிடம்
வேளம் என அழைக்கப்பட்டது.
வேளம் என்பதே பண்டை நாளில்
சிறையாகவும் இருந்தது’ இதுபோன்ற
வேளங்கள் சோழநாட்டில்
தஞ்சைநகரிலும் மற்றும் பிற
நகரங்களிலும் இருந்தன. கீழைவேளம்
(ஆனைமேற் துஞ்சினார்
தங்களாச்சி உடைய பிராட்டியார்
கிழானடிகள் கீழைவோம்),
பழையவேளம் (தஞ்சாவூர்க்
கூற்றத்துப் பழைய வேளம்),
சோழமாதேவியார் வேளம்,
இராஜகேசரிவர்மன் வேளம், உய்யக்
கொண்டான் திருமஞ்சனத்தார் வேளம்,
உடையார் ஆனை மேற்துஞ்சினார்
வெளம் போன்ற பலவேளங்களைப்
பற்றிச் சோழர் சாசனங்கள்
நமக்கு எடுத்தியம்புகின்றன.
இதே வழக்கம் மூன்றாம்
குலோத்துங்க சோழ ஆட்சியிலும்
இருந்ததென்பதை,
‘வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன்
மடக் கொடியை வேள மேற்றி’ என்ற
அவனது மெய்க்கீர்த்தி வரிகள்
நமக்கு எடுத்தியம்புகின்றன.
இதேபோல், பாண்டிய நாட்டிலும்
‘வேளம்’ என்ற சிறைகள்
இருந்துள்ளன. ‘உலகுடைய
பிராட்டியார் வேளம்’ என்ற சிறைச்
சாலை பற்றி சடாவர்மன் சுந்தர சோழ
பாண்டியரின்
கல்வெட்டு குறிப்பிடுகிறது.
முடிவுரை
இக்கட்டுரையில், நாம்
மேலே தொகுத்தளித்த
செய்திகளிலிருந்து சிலமுடிவுகளுக்கு வரலாம்.
அவை வருமாறு:
1 சட்டமும் நீதியும்,
அவற்றை நடை முறைப்படுத்தும்
அமைப் புக்களும் பண்டைத் தமிழகம்
முதல் இடைக்காலத் தமிழகம்
வரை ஒரு படிமுறை வளர்ச்சியில்
வளர்ந்துள்ளன.
2 இவற்றின் எச்சங்கள் இன்றைக்கும்
நமது கிராமங்களிலும் கிராம
அமைப்புகளிலும் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஐவர்
தலைமையில்
வழக்குகளை விசாரிக்கும்
ஊர்ப்பஞ்சாயத்து அமைப்பினைக்
கூறலாம்.
3 நாம் முன்னுரையில் கூறியபடி,
சட்டமும் நீதியும், இந்தியத்
துணைக்கண்டம் முழுவதும் ஏறத்தாழ
ஒரே மாதிரியைக் கொண்டிருந்தன என
அறிகிறோம்.
4 அமைப்புகள் ஒரேமாதிரியைக்
கொண்டிருந்தாலும்’ சட்டம் மர்றும்
நீதி ஆகியவை இந்தியா முழுமைக்கும்
ஒன்றாகவே இருந்ததா என்பது மிக
முக்கியமான கேள்வியாகும்.
அதனை மேலும் ஆராய்தல்
அவசியமாகும்.
பயன்பட்ட நூல்கள்
1 எட்டுத்தொகை
2 பத்துப்பாட்டு
3 பதினெண் கீழ்க்கணக்கு
4 இரட்டைக்காப்பியங்கள்
5 பெருங்கதை
6 பெரிய புராணம்
7 தென்னிந்திய சாசனத்தொகுதிகள்
8 தென்னிந்திய கோயிற் சாசனத்
தொகுதிகள்
9 இந்தியச் சாசனவியல்
ஆண்டறிக்கைக்கள்
10 பல்லவர் செப்பேடுகள் முப்பது
11 பாண்டியர் செப்பேடுகள் பத்து
12 Choudhory, R.K. Kautilyan Political
Idas and institution, Chowrhamba
Publications, Varanasi1971
13 Nagaswamy,R. Studies in Ancient
Tamil Law and Society, Tamilnadu
State Archaelogy Dept Ms.28 1978.
14 Thapar R. History of India, Pengun
Book 1990
15 Sharma R.S. Aspects of Political
Ideas and Institution in ancient India,
Motilal Banarsidass, Delhi.1974.
16 Nilakantasastri k.A. The Cholas’
Madras University Ms
17 Minakshi R. Administration and
Social Life Indian Pallavas Madas
University Madras
18 Dikshitar V.R.R. Studies in Tamil
literature and history, Madras
University, Madras, 1936.
19 Banerji S.C, Dharma-Sutras. Punthi
Pustat Calcutta 4 1962.
20 Sircar D C. Indian Epigraphy,
Moglal Banarsidas Delhi 1965.
21 do Indian Epigrephical Glossasy;
Motilal Banasridoss, Delhi,19.
22 Achyuthan M. Educational practices
In Manu, Panini and Kautilya. College
Book House Trivandrum,1794.
23 Thinakaran, A.J. The Seeond
Pandyan Empire, Madurai,1987.
24 Subbarayalu Y The State in Medcval
South India (600-1350) Maduiai
University ph D. Theses, 1976 un
(published)
25 Rajagopal, S. Documentation in
Tamilnadu upto 1350 A>D> Madurai
Unversity ph D. Theses 1994.
(unpublished)
26 சேதுராமன், N. பாண்டியர்
வரலாறு (கி.பி.500-1371)
கும்பகோணம்.
27 இராகவையங்கார், மு. ஆராய்ச்சித்
தொகுதி, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்
கழகம், தஞ்சாவூர்,
28 கலைக்கோவன், இரா,
வரலாறு அரையாண்டு ஆய்விதழ்,
29 கிருட்டினன், அ. கல்வெட்டுகளில்
வழக்கும் தண்டனையும், ‘தினமணி’
நாளிதழ

No comments:

Post a Comment