Total Pageviews

Thursday 19 July 2012

வைரமுத்துவின் வரிகள்

அறிவியல் தமிழ்
இயல், இசை, நாடகத்தோடு, அறிவியல்
தமிழ் நான்காம் தமிழாக வளர்க்க
வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
உலகில் பல மொழிகள் இருந்தாலும்
அறிவியல் எல்லா மொழிகளையும்
இணைக்கிறது. பழந்தமிழர் அறிவியலில்
முன்னோடியாக இருந்தனர். இன்றைய
தமிழர் இன்றைய
கண்டுபிடிப்புகளுக்கு தமிழில்
பெயரிட்டுக்கொள்வதோடு தம்
பங்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவது அவலத்திற்குரிய
ஒன்றாகும்.
அறிவியலின் முன்னோடியாக இருந்த
தமிழன்..
இன்று அறிவியலின் பின்னோடியாக
மாறியதற்கு அடிப்படைக் காரணம்
தாய்மொழியான தமிழைப்
புறக்கணி்த்ததே ஆகும்.
நான்காம் தமிழான அறிவியல்த் தமிழின்
தேவையைக் கவிஞர்
வைரமுத்து இவ்வாறு கூறுகிறர்.
தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளத்
தமிழர்கள் இரண்டு கத்திகள்
வைத்திருக்கிறார்கள்.
தொல்காப்பியத்தோடு தமிழ்
முடிந்துவிட்டது அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின்
கையில் துருப்பிடித்த கத்தி.
தமிழில் என்ன இருக்கிறது…. விஞ்ஞானம்
மனிதனுக்கு இறக்கைகள்
தயாரித்துக்கொண்டிருக்கும் போது இந்த
தமிழ் என்னும் தள்ளுவண்டியால்
யாது பயன்
என்று சலித்துக்கொள்கிறவர்களின்
கையில் சாணைபிடித்த் கத்தி.
இந்த
இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை.
பறிமுதல் செய்யப்பட வேண்டியவை.
துருப்பிடித்த கத்தியைத்
தூக்கி நிற்பவர்களே! உங்களைக்
கேட்கிறேன்- தமிழுக்கு ஏன் தாழ்பாள்
போடுகிறீர்கள்?
வானத்துக்கு ஏன் வரப்பு கட்டப்
பார்க்கிறீர்கள்?
வைர வைடூரியங்கள் வைத்திருக்கும்
தமிழின் கருவூலத்தில் ஒரு கம்யூட்டர்
வைக்க இடமில்லையா?
எல்லாப் பொருளும் இதன் பாலுள“
என்று நாம் திருக்குறளைச்
சொல்லியதையே திருத்தியாகவேண்டும்.
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி"
என்ற
மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று ஆனந்தங்காணுகிறவர்களே!
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி…
என்ற குறளை வைத்து, ஏகே 47
அப்போதே இருந்தது என்று இருமாந்து போகிறவர்களே!
"வலவன் ஏவா வான ஊர்தி"
என்பதை வைத்து ஏவுகளையுகத்தைத்
தமிழன் எப்போதோ துவங்கிவிட்டான்
என்று இன்பக்களி கொள்கிறவர்களே!
உங்களைக் கேட்கிறேன் -
தொப்பையே கர்ப்பமென்று எண்ணி மகிழ்ந்திருந்தால்
நம் வீ்ட்டில் தூளியாட முடியுமா?
தமிழ் பக்தியாளர்களே!
நீங்கள் கோபுரங்களிலேயே குடியிருக்க
முடியாது ; இறங்கி வாருங்கள்!
நம்மை விட்டுவிட்டு பூமி விரைவாய்
சுற்றிக்
கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கிவேயில்லை.
உலகத்தின் எல்லாக் கரைகளிலும்
அறிவியல் சமுத்திரத்தின் அலைகள்
அடிக்க ஆரம்பித்துவிட்டன.
நமது இனமும் அலையில்
காலை நனைத்திருக்கிறது் என்று கூட
சொல்லமாட்டேன்.
அடித்த அலையின் வேகத்தில்
நமது இனமும் கொஞ்சம்
நனைந்திருக்கிறது. என்று சொல்லுவேன்.
உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும்
வி்ண்ணை அளாவியும் காலத்தின்
தேவைகளைக்
கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது.
நாம் குறைந்தபட்சம் அந்தப் பொருள்களின்
பெயர்களையாவது தமிழில்
கண்டுபிடித்தோமைா?
தமிழைக்
காவியமொழி என்று சொல்லியே கழித்துவிடாதீர்கள்
தமிழை நீதி மொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.
தமிழ் நீட்சி கொண்டது நீங்கள் தான்
நீட்டிக்கத் தயாராக இல்லை.
சற்றே தமிழுக்குச் சுதந்திரம்
கொடுங்கள்.
தமிழன்னைக்குக் காதில்
குண்டலகேசியும், கழுத்தில்
சிந்தாமணியும், கையில்
வளையாபதியும், இடுப்பில்
மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும்
மட்டும் போதாது.
அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம்
ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர
வீசுங்கள்.
தமிழில் என்ன
இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட
அறிவுஜீவிகளே!
நீங்கள்
தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில்
யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம்
பாய்ந்திருப்பது போல நமது மூத்த
மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.
நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ்
அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக்
கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள்
முழுவதும் கர்வப்படலாம்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள
மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம்
அழுக்குத் தீரக் குளிக்கவே இல்லை.
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள்
வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.
ஆனால் உலகத்தில் விரல்விட்டுச்
சொல்லக்கூடிய மொழிகளில்
குரல்விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
ஊர்ச்சொற்கள் அனைத்திற்கும் வேர்ச்சொற்கள்
வைத்திருப்பது தமிழ்.
பக்தி இலக்கியத்திலும் கூட
விஞ்ஞானத்திற்குப்
பங்களிப்பு செய்யக்கூடியது தமிழ்.
ஆரவாரமில்லாத பழமைதான்
நிகழ்காலத்திற்கும் அஸ்திவாரம்.
வளர்வதற்குத் தமிழ் தயாராக
இருக்கிறது வளர்ப்பதற்குத் தான் தமிழன்
தயாராகயில்லை. இடைக்காலத்தில்
தமிழுக்கு நேர்ந்த சுளுக்கு இன்னும்
எடுக்கப்படவேயில்லை.
அய்யகோ மாறாத மரபாளர்களே!
இன்னும் எத்தனை நாளைக்குத் தான்
திருக்குறளையும், தேவாரத்தையும்
தமிழில்
மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பீர்கள்?
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் “கொல்“
“அரோ“ என்னும் செத்துப்போன
அசைச்சொற்களை பெய்த தகவல் பலகைகலாய்
அகவல் எழுதுவீர்கள்?
சோதனைக் குழாய்க் குழந்தைக்குமா நீங்கள்
பிள்ளைத்தமிழ் பாடுவீர்கள?
நமக்குக் கனவுகாணக் கூடத்
தெரியவில்லை.
நம்பிக்கையின் மீது கூட
நம்பிக்கையில்லை.
கம்பன்
மறைந்தபோது சரஸ்வதி இன்றோடு மங்கல
நூல் இழந்து போனாள் என்று ஒரு புலவன்
புலம்பியதை நயமாகக்
கொள்ளமுடியுமே தவிர நியாயமாகக்
கொள்ளமுடியாது.
தமிழ் யாரோடும்
முடிந்துவிடுவதில்லை.
மேதைகளும்,ஞானிகளும், யோகிகளும்,
அறிஞர்களும், கவிஞர்களும்,
சேமித்துவைத்த தமிழை நாம்
செலவு செய்யவேண்டும்.
அந்தச் செலவிலிருந்து புதிய
வரவு காணவேண்டும்.
இந்தச்
சூளுரையோடு திரும்பிப்பார்க்கிறேன்.
மனசு சுருங்கிப் போகிறது.
அறிவியலுக்கென்று தமிழில் எல்லோரும்
அறியும் ஏடுகள் இல்லை.
சில ஏடுகள் தவிர, அறிவியலுக்குப்
பக்கங்கள் ஒதுக்கப் பத்திரிக்கைகள்
இல்லை.
அழுத்துப் போன கருத்துக்களுக்கும்,
புழுத்துப்போன
விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது.
நம்மவர்கள்
ஒரு கருத்தை மொழிபெயர்த்து முடிப்பதற்குள்
அதன் முடிவே மாறிவிடுகிறது.
பழைய தமிழில் நாரெடுத்து புதிய
விஞ்ஞானத்தில் பூத்தொடுத்து இந்த
இனத்தின் தோளுக்கு அணிவிக்கிற
நாளுக்கு ஏங்குகிறேன்.
நம் வரலாறு வணக்கத்திற்குரியது
உலகப் பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்தோம்.
உலகுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்தோம்.
அவர்களுக்கு இல்லாததை நாம்
கொடுத்தோமே.. நமக்கு இல்லாத நவீன
உலகத்தை நாம் இறக்குமதி செய்தோமா?
முத்துக்களையும் மிளகையும்
ஏற்றுமதி செய்த இனம்
இன்று போதை மாத்திரைகளை இறக்குமதி செய்வதா?
ஒன்று சொல்கிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிற உலகம் நம்மைத்
திரும்பிப்பார்க்காது.
திரும்பிப்பார்த்தாலும் அதற்குத்
தெரிகிற தூரத்தில் இப்போது நாம்
இல்லை.
இனி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும்
விஞ்ஞான விளக்கை ஏற்றிவையுங்கள்.
துருப்பிடித்துப்போன
படைப்பிலக்கியங்கள் விஞ்ஞானத்தில்
தம்மைத் துலக்கிக்கொள்ளட்டும்.
புலன்களை நீவிவிடுகிற
பொழுதுபோக்கிலிருந்து விஞ்ஞான
சாதனங்கள் சற்றே விடுபடட்டும்.
இதனால் சகலமானவர்களுக்கும்
தெரிவிப்பது என்னவென்றால்,
இன்னும்
இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத்
தேவையான குப்பைகள் தமிழில்
கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட
அறிவும் உணர்வும் இன்னும்
ஆக்கப்படவில்லை.
நம்வாழ்க்கை வாக்கியம்
இனி இதுவாகத்தான் இருக்கவேண்டும்
ஓ விஞ்ஞானமே!
அறிவு கொடு!
ஏ தமிழா!
உணர்வு கொடு!

No comments:

Post a Comment